×

கடலூரில் இன்று காலை ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி: பெண் கவலைக்கிடம்

கடலூர்: கடலூர் குண்டு சாலையில் இன்று காலை ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடலூர் அருகே காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் ரவி (53). இவரது மனைவி சரஸ்வதி (35) கணவன், மனைவி இருவரும் இன்று காலை 7 மணி அளவில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோவை கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (65) ஓட்டி சென்றார். கடலூர் குண்டுசாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, புதுச்சேரி மார்க்கத்திலிருந்து எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட ஆட்டோ டிரைவரும், ரவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகம் மற்றும் ரவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விபத்து காரணமாக குண்டுசாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கடலூரில் இன்று காலை ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி: பெண் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Kundu road ,Ravi ,Karamanikuppam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை