×

வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளை சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை ஆய்வு செய்தார் ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் (VVPAT) இயந்திரங்களை 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் கணினி குலுக்கல் முறையில் (Randomization) 16 சட்டமன்றத் தொகுதிகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் (VVPAT) இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வைப்பு அறையிலிருந்து, 16 சட்டமன்றத் தொகுதிகளின் வைப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று (26.03.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது: நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் (VVPAT) ஆகியவை முதற்கட்டமாக கணினி குலுக்கல் முறையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இயந்திரங்களுக்கான எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதன்படி, வாக்குப்பதிவிற்கான 4469 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4469 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 4842 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் (VVPAT) சிந்தாதிரிப்பேட்டை வைப்பு அறையிலிருந்து அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் வைப்பு அறைகளுக்கு காவல்துறையின் பாதுகாப்போடு அனுப்பி வைக்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த இயந்திரங்கள் வீடியோ கண்காணிப்பு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இருப்பு இயந்திரங்கள் (Reserve Machines) இந்த வைப்பு அறையிலேயே வைக்கப்படும்.

தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களின் மூலம் ரூ.2,35,89,600/-மும், ரூ.5,32,60,775 மதிப்பிலான 8046.45 கிராம் தங்கம், ரூ.15,00,000 மதிப்பிலான 12 ஐ-போன்கள் என மொத்தம் ரூ.7,83,50,375/- மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் பற்று வைக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 23 வேட்பாளர்கள், தென்சென்னையில் 20 வேட்பாளர்கள், மத்திய சென்னையில் 9 வேட்பாளர்கள் என மொத்தம் நேற்று வரை (25.03.2024 வரை) 52 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க 6 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் உள்ளனர்.

மேலும், தேர்தல் பணிகளை கண்காணிக்க வடசென்னையில் .கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, மத்திய சென்னையில் டாக்டர் டி. சுரேஷ், தென் சென்னையில் முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் பொது பார்வையாளர்களாகவும், காவல் பணிகளை கண்காணிக்க வடசென்னையில் உதய் பாஸ்கர் பில்லா, மத்திய சென்னை மற்றும் தென்சென்னையில் சஞ்சய் பாட்டியா, அவர்கள் தேர்தல் காவல் பார்வையாளர்களாகவும் தேர்தல் பணிகளை கண்காணிக்க உள்ளனர் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளை சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை ஆய்வு செய்தார் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Radhakrishnan ,CHENNAI ,Election Officer ,Chennai District ,
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்