×

அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ

*3 மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராட்டம்

அறந்தாங்கி : அறந்தாங்கியில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 கடைகள் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. 3 மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சோலையப்பன். இவர் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் சந்தை அருகே உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் பாத்திரக்கடை வைத்து உள்ளார். இதன் அருகே முத்துலட்சுமி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் பாத்திரக்கடை, நகைக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ வெடி கடைக்கும் பரவியது. இதில் பட்டாசுகள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கீரமங்கலம் பகுதி தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் வந்தனர். காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க வீரர்கள் 3 மணி நேரத்துக்கும் மேல் போராடினர். அங்குள்ள பொற்குடையார் கோயிலில் இன்று பங்குனி உத்திரம் திருவிழாவிற்காக தண்ணீர் லாரிகள் சென்று விட்டன.

இதனால் தீயை அணைப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து 2 கடைகளிலும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் பாத்திரக்கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக், அலுமினிய பொருட்களும், நகைக்கடையில் இருந்த நகைகள், வெடி பொருட்களும் எரிந்து நாசமாகின. நகைகளின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை.

The post அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Arantangi ,Pudukottai ,
× RELATED அறந்தாங்கியில் வெறிநாய் கடித்து 2 பேர் படுகாயம்