பட்டுக்கோட்டை, மார்ச் 26: இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, வாக்களிப்பதில்உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் இணைந்து நேற்று மாலை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெய தலைமை வகித்தார். தாசில்தார் சுகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் வாக்களிப்பதில் உறுதி கொள்ளுங்கள், வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், 100% தவறாமல் வாக்களிப்போம் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் ஜெய தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அந்த உறுதிமொழியில் எனது வாக்கு எனது உரிமை, அனைவரும் சேர்ந்து வலிமையான ஜனநாயகத்தை உருவாக்குவோம், நேர்மையாகவும், நியாயமாகவும் எனது வாக்கை செலுத்துவேன், வாக்கின் உரிமை ஜனநாயகத்தின் வலிமை என்று உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இணைந்து உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், சரக வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிருவாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர்.
The post நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.