×

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.6.32 லட்சம் அதிரடி பறிமுதல்: பறக்கும்படை நடவடிக்கை

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தனிநபர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலைக்குழு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்ணடி பகுதியில் ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சையது அபுதாஹிர் (19) என்பவர், தனது இரு சக்கர வாகனத்தில் பாரிமுனை நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தின் டிக்கியில் சோதனை மேற்கொண்டனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.4 லட்சம் இருந்தது. அந்த பணம் குறித்த ஆவணங்களை போலீசார் கேட்டனர்.

அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என அபுதாஹிர் தெரிவித்தார். பின்னர் அவரிடமிருந்து ரூ.4 லட்சத்தை பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர். மற்றொரு சம்பவம்: எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ சாலையில் நேற்று மாலை மாநகராட்சி உதவி பொறியாளர் பாஸ்கர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூ.1.27 லட்சம் இருந்தது. அந்த பணத்தை கொண்டு வந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த சாதர்ஷ் என்பவரிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பிறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

வேளச்சேரி:

அடையாறு இந்திரா நகர் அருகே பறக்கும் படை அதிகாரி பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், ரூ.1.5 லட்சம் இருந்தது. காரில் இருந்த துரைப்பாக்கத்தை சேர்நத கலா (66) என்பவரிடம் விசாரித்தபோது, அவரது மகன் வெளிநாட்டில் இருப்பதாகவும், அடுத்த மாதம் தானும் வெளிநாடு செல்ல இருப்பதால், அதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆவணம் இல்லாததால், பணத்தை கைப்பற்றி சைதாப்பேட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

The post ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.6.32 லட்சம் அதிரடி பறிமுதல்: பறக்கும்படை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...