×

கடவூர், தோகைமலை பகுதியில் வெள்ளரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

*அதிக மகசூல் பெற தொழில்நுட்ப ஆலோசனை

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை அளித்து உள்ளனர்.
கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள சில விவசாயிகள் வௌ்ளரிக்காய் சாகுபடியை விரும்பி செய்து வருகின்றனர். இதனால் வௌ்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு சாகுபடி செய்தால் அதிக மகசல் பெற்று லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். பருவத்திற்கு ஏற்ற தோட்டப் பயிரான வௌ்ளரியை பயிரிட்டால் அடுத்த 50 நாட்களில் அறுவடை செய்து அதிகமான லாபம் பெறமுடியும். அனைவரும் விரும்பி உண்ணும் காய்வகைகளில் ஒன்று வௌ்ளரி ஆகும். உடலுக்கு குளுமை தரும் காய்களில் ஒன்றாகவும் வௌ்ளரி இருந்து வருகிறது.

இதன் ரகங்கள், பருவம் மற்றும் மண் தட்பவெட்ப நிலை: வௌ்ளரி சாகுபடியில் கோ 1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி ஆகிய ரகங்கள் உள்ளது. அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை உடையது. ஆனால் அதிகமான மகசூல் சாகுபடி பெற வேண்டும் என்றால் களிமண் கூடிய இருமண் பாங்கான மண் வகைகள் மிகவும் ஏற்றதாகும். வௌ்ளரி பயிர் என்பது ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். குறைந்த வெப்பநிலை கொண்ட பருவ சாகுபடிக்கு சிறந்தது. வௌ்ளரி சாகுபடியை ஜுன், செப்டம்பர் மற்றும் டிசம்பர், மார்ச் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

நிலம் தயாரித்தல், விதை அளவு மற்றும் நடவு: வெள்ளரி சாகுபடியில் நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். அதன்பிறகு 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் ஆழம், அகலம் மற்றும் நீளத்தில் குழிகளை அமைக்க வேண்டும். அதில் நன்றாக மக்கிய தொழு உரம் 10 கிலோ இட வேண்டும்.இத்துடன் 100 கிராம் கலப்பு உரம் இட்டு மேல் மண் கலந்து நிரப்பி விதையை ஊன்ற வேண்டும். வௌ்ளரி சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதை தேவைப்படுகிறது. விதை ஊன்றுவதற்கு முன்னதாக ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 4 முதல் 5 விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் பாய்ச்சுதல் மற்றும் பின் செய் நேர்த்தி செய்தல்: வௌ்ளரி சாகுபடியில் விதை ஊன்றியவுடன் குடம் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் விதை முளைத்து செடி வளர்ந்தவுடன் வாய்க்கால் மூலமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் நன்றாக வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதேபோல் விதை முளைத்து வந்தவுடன் குழிக்கு 3 செடி விட்டு மற்ற செடிகளை பிடுங்கி விட வேண்டும்.

கொடி வளர்ந்தவுடன் குழியை 30 நாட்கள் இடைவெளியில் களை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியான 25 பிபிஎம் என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி கிராம் அளவில் கலந்து இரண்டாம் இலைப் பருவத்தின் போது முதல் முறையாக தெளிக்க வேண்டும். இதேபோல் 7 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தலாம். விதை ஊன்றி 30 நாட்கள் கழித்து 50 கிராம் யூரியாவை மேல் உரமாக இடலாம்.

பயிர்பாதுகாப்புகள்: வௌ்ளரி சாகுபடியில் பூசணி வண்டு, பழ ஈயின் தாக்குதல் அதிகமாக தோன்றும். அப்போது ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பரைல் கிராம் கலந்து தெளித்தால் பூசணி வண்டை எளிமையாக கட்டுப்படுத்தலாம். இதேபோல் மாலத்தியான் மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் கலந்து தெளித்தால் பழ ஈயை கட்டுப்படுத்தலாம். மேலும் பழ ஈயை கருவாட்டுப் பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் மகசூல்: மேற்படி வழி முறைகளை பின்பற்றி சாகுபடியில் ஈடுபட்டு வந்தால் விதை ஊன்றி 50 நாட்களில் வௌ்ளரிக்காய்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும். அதன் பின்னர் 8 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலமாக ஒரு ஹெக்டேருக்கு 8 முதல் 10 டன் வரை வௌ்ளரிக் காய்கள் மகசூல் பெற்று அதிகமான லாபங்களை பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

The post கடவூர், தோகைமலை பகுதியில் வெள்ளரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Kadavur ,Tokaimalai ,Thokaimalai ,Karur ,Dinakaran ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...