×

நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

நெல்லை : நெல்லை அருகேயுள்ள சாஸ்தா கோயிலில் குடும்பத்துடன் சுவாமி கும்பிட வந்த பள்ளி சிறுவன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பரப்பாடி அடுத்துள்ள பற்பநாதபுரத்தைச் சேர்ந்தவர் மோசஸ். இவரது மகன் சந்திரமூர்த்தி(7). அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மோசஸ் குடும்பத்துடன் நெல்லை அருகே கீழமுன்னீர்பள்ளத்திலுள்ள சாஸ்தா கோயிலுக்கு வந்தார்.

நேற்று மதியம் கீழமுன்னீர்பள்ளம் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் மோசஸ் குடும்பத்துடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது சிறுவன் சந்திரமூர்த்தி ஆழமான பகுதியில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கினார். அப்போது சிறுவன் காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதனை கண்ட மோசஸ் உட்பட சிலர், சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவனின் உடல் தண்ணீரில் மூழ்கியது. இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீரர்கள் மதியம் 3மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி மாலை 5 மணிக்கு சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பங்குனி உத்திரத்ைத முன்னிட்டு கோயிலுக்கு வந்த இடத்தில் சிறுவன் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் கோயிலுக்கு வந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

The post நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Paritapam river ,Swami ,Shasta temple ,Thamirapharani river ,Moses ,Balapanathapuram ,Parapadi ,Nanguneri ,Chandramurthy ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...