×

மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி மகன் விஜய்(23). இவர் விருத்தாசலம் பகுதியில், தந்தையை இழந்து தாயுடன் வசிக்கும் ஒரு பெண்ணை கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டு மாமியார் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து வந்துள்ளார். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவரது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் பழகி வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாய், அவரை கண்டித்ததால் சம்பவத்தன்று சிறுமியை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். தொடர்ந்து பல இடங்களில் சிறுமியின் தாய் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

பின்னர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் விருத்தாசலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அவர் சிறுமியுடன் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், சிறுமியை மீட்டு அந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் சிறுமிக்கு அவர் தாலி கட்டியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்து போக்சோ சட்டத்தில் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pokso ,Vrudhachalam ,Selvamani ,Vijay ,Chinnavatavadi ,Cuddalore district ,Vriddhachalam ,
× RELATED பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில்...