×

வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்: கடந்த 1 மாதத்தில் மலை ஏறிய 5 பேர் இறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழந்தனர். இந்தியாவில் அமைந்துள்ள சைவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை. கைலாய மலையைப் போல வெள்ளியங்கிரி மலையிலும் ஆதிசிவன் சிலகாலம் தவநிலையில் இருந்ததால் இது ‘தென் கைலாயம்’ என்று போற்றப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் ஆறு மலைகள் கடந்து ஏழாவது மலையில் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கிரிவலம் வருவது வழக்கம்.

பூண்டி மலையடிவாரத்திலிருந்து தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி சென்றடைய முதல் மலை உச்சியில் இருக்கும் வெள்ளை விநாயகர் இரண்டாவது மலை பகுதியில் இருக்கும் கைதட்டி சுனை பாம்பாட்டி சித்தர் குகை மூன்றாவது மலையில் இருக்கும் வழுக்குப்பாறை, வாய் சோலை, ஒட்டர் சமாதி, ஆகியவற்றை கடந்து 5, 6 ஆகிய செங்குத்தான மலைகளை கடந்தால் விபூதி மலை ஆண்டி சுனை ஆகியவற்றில் பக்தர்கள் இளைப்பாறி ஏழாவது மலையில் பஞ்சலிங்க பூத சுயம்புலிங்கமாக இருக்கும் வெள்ளியங்கிரி தரிசிக்க சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று ஒரு லட்சம் பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த மலைகளை ஏறுவதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உடல் நலக் கோளாறுகள் மற்றும் மலைகளுக்கு மேலே நிலவும் கடுமையான குளிர் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ் (57) உயிரிழந்தார். மருத்துவர் சுப்பாராவ் 4-வது மலைக்கு சென்ற போது நெஞ்சுவலியால் மயங்கி விழுந்துள்ளார். வனத்துறை உதவியுடன் சுப்பாராவை மலை அடிவாரம் தூக்கி வந்து பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் (35) முதல் மலை குரங்குபாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு மலை ஏறிய தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (40) மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். வெள்ளியங்கிரியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. உடலநலம், இருதய பிரச்சனை உள்ளவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வனத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வெள்ளியங்கிரி மலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

The post வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்: கடந்த 1 மாதத்தில் மலை ஏறிய 5 பேர் இறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Velliangiri Hill ,Coimbatore ,Velliangiri ,Saivite ,India ,Adhisiva ,Kailaya hill ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!