×

சென்னையில் இதுவரை ₹5 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 5.07 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் 2024 என்ற வகையில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேரணி நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகள் ஏதுவாக வாக்களிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த மாறி ஒவ்வொரு ஏற்பாடுகளை செய்து வருகிறோம் .

3719 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக பாதை இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய பிரதான கோரிக்கையாக உள்ளது. வாக்கு சாவடிக்கு வர இயலாத மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 85 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்களுக்கு அவர்களுக்கு வீடுகளுக்கு சென்று வாக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . 63,751 முதியவர்கள் உள்ளனர். 10370 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இல்லத்திலே வாக்களிக்கும் முறை கொண்டு வரப்படும் . மேலும்,வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தனை அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் . சென்னையை பொறுத்தவரை ஓட்டு சதவீதம் 60 விழுக்காடாக ஆக தான் எப்போதும் இருக்கும்.

சராசரியா மாநிலத்தில் 72 விழுக்காடு இருக்கும் இதில் மாற்றுத்திறனாளிகள் தான் அதிக அளவு உள்ளனர்.அவர்கள் நமக்கு எடுத்துகாட்டாக உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அனைத்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கூட மாற்றுத்திறனாளிகளை சமமாக நடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம் .

சென்னையை பொறுத்தவரை இதுவரை 5.17 கோடி அளவிலான பணம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கையில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துப் போகலாம் அதற்கு மேல் எடுத்துப் போகும் போது ஆவணத்தோடு எடுத்துச் செல்ல வேண்டும் அதேபோல நகை உற்பத்தி செய்யும் நகைகடை உரிமையாளர்களும் உரிய ஆவணத்தோடு நகைகளை எடுத்துச் செல்ல வேண்டும் இல்லை என்றால் இதனை தற்பொழுது தவிர்க்க வேண்டும்.முறையான ஆவணம் இன்றி கொண்டு வரப்படும் நகைகளை பறிமுதல் செய்யப்படும்போது அவர்கள் எங்களின் மீதே குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். தேர்தல் ஆணையம் விதித்துள்ளப்படி தான் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே :
அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று பேரணி நடத்தப்பட்டு இருக்கிறது. 12டி படிவத்தை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கலாம் ஆனால் அவர்களுக்கு வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். இவ்வாறு கூறினார்.

The post சென்னையில் இதுவரை ₹5 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல்: ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Radhakrishnan ,District ,Election Officer ,Parliament ,Election Commission of India ,Chennai Marina ,
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்