×

வாக்கு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூம் அமைக்கும் பணி: நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

வேலூர்: நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூம்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சியினர் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 19ம் தேதி பதிவாகும் வாக்குகள், ஜூன் 4ம் தேதி எண்ணப்படவுள்ளன.

இதையொட்டி அந்தந்த தாலுகா அலுவலகங்களில் ஸ்ட்ராங் ரூம்கள் அமைக்கப்பட்டு தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வாக்குகள் பதிவாகும் இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஸ்ட்ராங் ரூம்கள் அமைக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. அதன்படி காற்று புகாத வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் நாடாளுமன்ற ெதாகுதியில் பதிவாகும் வாக்கு எண்ணும் மையாக வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்கு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், வாக்கும் எண்ணும் மையத்தின் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி ஆய்வு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்தில் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான ஸ்டராங் ரூம்மின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மாநிலம் முழுவதும் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post வாக்கு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூம் அமைக்கும் பணி: நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu… ,
× RELATED 2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய...