×

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அக்கறையுடன் செயல்படவேண்டும்

*பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுறுத்தல்

கரூர் : கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தங்கவேல் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்நடைபெற்றது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் கரூர் மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்தப்பயிற்சிக் கூட்டத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும்,கலெக்டருமான தங்கவேல் தொடங்கி வைத்துப் பேசியதாவது: நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலர்களும் முழு அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 22 மண்டல அலுவலர்களும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 22 மண்டல அலுவலர்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 24 மண்டல அலுவலர்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 25 மண்டல அலுவலர்களும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 கூடுதல் மண்டல அலுவலர்கள் என 8 மண்டல அலுவலர்களும், என மொத்தம் 101 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு அலுவலர்களாக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

இங்கு பயிற்சி பெறும் மண்டல அலுவலர்கள் உங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு இந்தப்பயிற்சியை வழங்க உள்ளீர்கள். எனவே, இங்கு சொல்லப்படுகின்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். கூறப்படும் தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் அதைக்கேட்டு தெளிவுபெறவேண்டும்.

வாக்குப்பதிவு நாள் அன்று முதலில் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக்காட்டப்பட வேண்டும்.வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவருக்கு மட்டும் காட்டும் இயந்திரம் உள்ளிட்ட கருவியினை கையாளும் முறை குறித்தும் அனைவரும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணியில் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்படவேண்டும் என்றார்.கூட்டத்தில் கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சையதுகாதர், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முகமதுபைசல், கருணாகரன், சுரேஸ், தனலட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அக்கறையுடன் செயல்படவேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur ,General ,Constituency ,Thangavel ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...