×

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு: 5 விசைப்படகுகளும் பறிமுதல்

மண்டபம்: கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் காலை 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 2 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். வெவ்வேறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். பின்னர் 5 விசைப்படகுகளை சிறை பிடித்தனர்.

அப்போது ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த அருளானந்தம் என்பவருக்கு சொந்தமான படகிலிருந்த ஜெகன், அந்தோணி காட்சன், ராஜசேகர், ராஜா முகமது, ரஞ்சித், ராமு, அந்தோணி காயன், மோகன், மனோகரன், சேகரன், முருகன் ஆகிய 11 மீனவர்களையும் பிடித்தனர். அதுபோல தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த விக்டோரியனுக்கு சொந்தமான படகிலிருந்த அந்தோணி ஆரோன், சேசுராஜ், திருபால் ஆகிய 3 மீனவர்களும், தங்கச்சிமடம் ராஜ் என்பவருக்கு சொந்தமான படகிலிருந்த படகு உரிமையாளர் ராஜ், ஜஸ்டின், பரலோக ராஜ், ராஜ்,பாலா, நந்தா, மதன், ஹரி கிருஷ்ணன், கோவிந்தன், அல்லா பிச்சை, மாரி ஆகிய 11 மீனவர்களும் சேர்த்து மொத்தம் 25 மீனவர்களையும் கைது செய்து, யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் மற்றொரு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மகத்துவம் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த ஜஸ்டின்திரவியம், கோவிந்தன், முனியராஜ், ஆரோக்கியராஜ், ஆகிய 4 மீனவர்களையும், ராமேஸ்வரம் மோகனுக்கு சொந்தமான படகில் இருந்த நிக்சன், முத்துராமலிங்கம், முனியசாமி, ஆகிய 3 மீனவர்களையும் சேர்த்து 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமன்னார் கடற்படையினரால் கைதான 7 மீனவர்கள், தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுமார்ச் 28ம் தேதி வரை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் காங்கேசன் துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏப்.4ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவதால் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு: 5 விசைப்படகுகளும் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Mandapam ,Sri Lanka Navy ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை