×

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியை சேர்ந்தவர் விவசாயி திருமலை. இவர் காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், என சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்து கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என்று கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா யோகா மையத்திற்கும் வரவில்லை என்று கூறினர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடந்துவருகிறது. எனவே, காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி காணாமல் போன சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி கடந்த 2016 முதல் ஈஷா யோகா மையத்திலிருந்து வெவ்வேறு தேதிகளில், 6 பேர் காணாமல் போய் உள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இதையடுத்து நீதிபதிகள், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8க்கு தள்ளிவைத்தனர்.

The post ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Isha Yoga Center ,CHENNAI ,Thirumalai ,Kulasekarapatti ,Tenkasi district ,Madras High Court ,Swami Bhavadatta ,Ganesan ,Coimbatore ,Dinakaran ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்