×

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பதா? பாஜவின் ஏஜென்டாக செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் அறிக்கை

சென்னை: பாஜவின் ஏஜென்டாக செயல்படும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டது முதல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சிக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சட்டரீதியாக தடை ஏதும் இல்லாத நிலையில் திமுக மீது ஆளுநருக்கு உள்ள வன்மத்துடன், வேண்டுமென்றே பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பாஜவின் ஏஜென்டான ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதனை பாஜ அரசு செயல்படுத்தவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென்றும், இல்லையேல் ஆளுநருக்குக் கடுமையான உத்தரவினைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே என்றும், தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக உள்ளன எனவும் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென ஆளுநரை மார்க்சிஸ்ட் வலியுறுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலும் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்.

The post பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பதா? பாஜவின் ஏஜென்டாக செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,BJP ,Congress ,CHENNAI ,Selvaperundagai ,Tamil Nadu ,President ,Selvaperunthagai ,Tamil ,Nadu ,Governor ,R.N. ,Ravi ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...