×

குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சாடல்

சென்னை: குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைந்துள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மறைமுகமாக சாடியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சி.வி.சண்முகம் 10 ஆண்டுகாலமாக கூட்டணி கட்சிகளையும், எதிர்கட்சிகளையும் உடைத்த பாஜக அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை என்றார். மேலும் தேசியமும் தமிழும் என கூறி கூட்டணி அமைத்துள்ளவர்களுக்கு தங்களின் குடும்பமும்,பணமுமே பிரதானம் என்று பாமகவை அவர் மறைமுகமாக சாடினார்.

இதே போல் பாஜக, பாமக அமைத்துள்ள கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் இட ஒதுக்கீடு என்றால் அறவே வேண்டாம் என்கிற கட்சியான பாஜகவுடன் இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ராமதாஸ் கூட்டணி அமைந்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார். அதே போல் வழக்குகளை காட்டி பாஜகவால் அதிமுகவை அடிபணியவைக்க முடியாது என்றும் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

 

The post குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சாடல் appeared first on Dinakaran.

Tags : CPM ,BJP ,AIADMK Rajya Sabha ,Shanmugam Chatal ,CHENNAI ,Shanmugam ,AIADMK ,Villupuram ,CV ,Dinakaran ,
× RELATED பொய் போட்டி மோடி நம்பர் ஒன் அண்ணாமலைக்கு 2வது இடம்தான்: சொல்கிறார் கருணாஸ்