சேலம், மார்ச் 20: பங்குனி விழாவையொட்டி, சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைபிடாரியம்மனுக்கு நேற்றிரவு பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது.சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் எல்லைபிடாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அம்மனுக்கு திருவிழா கொண்டாடப்படும். நடப்பாண்டு நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சாத்தப்படும் பூக்கள் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் இரவு 8.30 மணியளவில் மேள, தாளத்துடன் அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடந்தது. நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளரும், சேலம் மாநகராட்சி பணிக்குழு உறுப்பினருமான சாந்தமூர்த்தி மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 26ம் தேதி இரவு 8 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பும், 27ம் தேதி அதிகாலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலம், அலகு குத்துதலும், பகல் 12 மணிக்கு பொங்கல் வைபோகமும், இரவு 7 மணிக்கு அக்னி கரகம், பூங்கரகத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 28ம் தேதி காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் அம்மன் திருக்கல்யாணமும், 10 மணிக்கு அக்னி குண்டம் பொருத்துதல், மாலை 4.30 மணிக்கு அம்மன் பக்தர்களுடன் சின்னத்திருப்பதி சென்று மஞ்சள் நீராடி, மஞ்சள் ஆடை அணிந்து மாலை 6 மணிக்கு அம்மனும், பக்தர்களும், பெண்கள் அக்னி குண்டும் இறங்குதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடக்கிறது.
29ம் தேதி காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலமும், மதியம் 12 மணிக்கு பால் அபிஷேகமும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு தங்கக்கவசம் சாத்துப்படியும், 30ம் தேதி இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சத்தாபரணம் திருவீதி உலா வருதலும், 31ம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி அம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஏப்.1ம் தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.
The post எல்லைபிடாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் appeared first on Dinakaran.