×

தம்பியை கொடூரமாக எரித்துக்கொன்ற அண்ணன் வேலூர் அருகே பரபரப்பு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில்

வேலூர், மார்ச் 20: வேலூர் அருகே குடிபோதை தகராறில் தம்பியை அவரது அண்ணனே கொடூரமாக எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(45), பெயிண்டர். இவரது தம்பி இளவரசன்(35), கூலித்தொழிலாளி. இருவருக்கும் திருமணமாகவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இருவரும் வீட்டில் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் தகராறில் ஈடுபட்ட நிலையில் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், வீட்டில் வைத்திருந்த தின்னரை (பெயிண்ட்டில் கலக்கும் திரவம்) எடுத்து தம்பி இளவரசன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இளவரசன் உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். இளவரசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். பலத்த தீக்காயமடைந்த அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவே இளவரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை நேற்று காலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதை தகராறில் தம்பியை அண்ணனே எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post தம்பியை கொடூரமாக எரித்துக்கொன்ற அண்ணன் வேலூர் அருகே பரபரப்பு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Selvakumar ,Tellur ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...