×

கராத்தே பயிற்சிக்கு வந்த 15 வயது சிறுமியிடம் சில்மிஷம் மாஸ்டருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு

திருவண்ணாமலை, மார்ச் 20: சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (38). திருமணமான இவர் அதே பகுதியில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 1.3.2022 அன்று, கராத்தே பயிற்சிக்கு வந்த 15 வயது சிறுமியிடம், கண்ணன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தானிப்பாடி போலீசில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை ரூரல் டிஎஸ்பி அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த கராத்தே மாஸ்டர் கண்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹15 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கண்ணனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கராத்தே பயிற்சிக்கு வந்த 15 வயது சிறுமியிடம் சில்மிஷம் மாஸ்டருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai POCSO Court ,Chilmisham ,Thiruvannamalai ,Kannan ,Tanipadi village ,Thandarampatu taluk ,
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் கூலி தொழிலாளி கைது