×

உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!

உதகை: உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலானது இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த தகவல் அறிந்த பெற்றோர்களும், உறவினர்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களை அழைத்து சென்றனர்.

மோப்பநாய் உதவியுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்த போது அது வதந்தி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று உதகையில் 2 பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள ஜே.எஸ்.எஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் என இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் வந்ததை பார்த்த பள்ளி நிர்வாகம் உடனடியாக நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் 2 பள்ளிகளுக்கும் மோப்பநாய் உதவியுடன் சென்ற 3 வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுவரை வெடிகுண்டு இருப்பதற்கான எந்த வித தடயமும் இல்லாத நிலையில் இதுவும் மிரட்டலாக பார்க்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த இரண்டு பள்ளிகளிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Utagai ,Chennai ,Coimbatore ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...