×

தொண்டாமுத்தூர் பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை

 

தொண்டாமுத்தூர், மார்ச் 19: தொண்டாமுத்தூர் பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அருகே தொண்டாமுத்தூர் பேரூராட்சி 10-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் ஸ்கைலாப் (44). சம்பவத்தன்று காலையில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள விநாயகர் கோவில் அருகில் பொதுமக்கள் சார்பாக கோவில் சுற்றுச்சுவர் பணிகள் நடந்து வந்துள்ளது.

அப்போது தொண்டாமுத்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாபு என்பவர் சுற்றுச்சுவர் கட்டக்கூடாது. யாரை கேட்டு கட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது கவுன்சிலர் ஸ்கைலாப் பொதுமக்களிடம் ஒப்புதல் பெற்று கட்டுகிறேன் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பாபு, ஸ்கைலாப் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும், மேலும் கொலை மிரட்டல் விடுத்து தடுக்க வந்த ரமேஷ் என்பவரை செங்கல்லில் தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதையடுத்து காயமடைந்த திமுக கவுன்சிலர் ஸ்கைலாப் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாபு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

The post தொண்டாமுத்தூர் பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : DMK ,Thondamuthur ,10th Ward ,Thondamuthur Municipality ,Coimbatore ,Dinakaran ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!