×

பெரியபாளையம் அருகே பரபரப்பு: ஊரை காணவில்லை என விஏஒ அலுவலம் முற்றுகை: அதிகாரிகள் சமரசம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வடமதுரை ஊரை காணவில்லை என கிராம மக்கள் விஏஒ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் எர்ணாங்குப்பம், பேட்டை மேடு, செங்காத்தா குளம், மாளிபேடு, மேட்டுதெரு, பெரியகாலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ஊராட்சியில், வடமதுரை பி.பிளாக் என்று பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 9.6.2017 முதல் வடமதுரை என்பதற்கு பதிலாக எர்ணாங்குப்பம் என்று அனைத்து அரசு சான்றிதழ்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, விஏஒ, வருவாய் ஆய்வாளர், தாசில்தார், கலெக்டர் அலுவலகம் என பல இடங்களில் மனு கொடுக்கபட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

மேலும் இதுசம்மந்தமாக வடமதுரை என்ற பெயரை காணவில்லை என கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் வடமதுரை திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பிடிஒவிடம் வடமதுரை பெயர் விடுபட்டுள்ளது, அதை அரசிதழில் சேர்க்க வேண்டும் என பேசினார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும், இதனால் ஆத்திரமடைந்த வடமதுரை கிராம மக்கள் நேற்று ஒன்று சேர்ந்து வடமதுரை ஊரைக் காணவில்லை என கோஷங்கள் எழுப்பியபடி விஏஒ அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள், இது வடமதுரையா இல்ல எர்ணாங்குப்பமா, அண்ணாச்சி அண்ணாச்சி எங்க ஊரு பேரு என்னாச்சி என பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விஏஒ அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை துணை தாசில்தார் ஞானசுந்தரி, ஆய்வாளர் கீதா மற்றும் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவயிடத்திற்கு வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைக்கேட்ட கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் பெயரை மாற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கூறினர். மேலும் வடமதுரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வடமதுரை என்ற ஊரை காணவில்லை என கூறி கிராம மக்கள் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post பெரியபாளையம் அருகே பரபரப்பு: ஊரை காணவில்லை என விஏஒ அலுவலம் முற்றுகை: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,VAO ,Uthukkottai ,Vadamadurai ,Ernankuppam ,Pettai Medu ,Sengatha Kulam ,Malipedu ,Mettutheru ,Periyakalani ,Vadamadurai Panchayat ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!