×

பொன்முடி பதவியேற்பு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல்!!

டெல்லி: பொன்முடி பதவியேற்பு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கின் பொன்முடி குற்றவாளி என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சமீபத்தில் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதனால் அவர் மீண்டும் எம்எல்ஏ ஆனார். அதனைத்தொடர்ந்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்க, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான தண்டனையைத்தான் மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது. அவர் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளிக்கவில்லை. எனவே பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது” என்று முதல்வருக்கு அளுநர் பதில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பொன்முடி விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், பொன்முடியை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கும்படி தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். சட்டப்படி அதனை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார். மேலும், தொடர்ந்து மாநில அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் உடனடியாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக கோரிக்கை வைத்தனர். அதில், இந்த வழக்கு மிகவும் அவசரமான வழக்கு என்றும், எங்கள் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதனை பதிவு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். எனவே, ஓரிரு நாட்களில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பொன்முடி பதவியேற்பு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Tags : Justice ,Tamil Nadu Government ,Delhi ,Governor ,R. N. ,Chief Justice ,Government of Tamil Nadu ,Ravi ,Dinakaran ,
× RELATED அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்...