×

சென்னையில் ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பிரபல ரவுடி பீகாரில் கைது

சென்னை:சென்னையில் ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பிரபல ரவுடியை தனிப்படை போலீசார் பீகார் மாநிலத்தில் கைது செய்தனர். சென்னை திருமங்கலம் பகுதியில் கடந்த 13ம் தேதி 5 சொகுசு காரில் சுற்றித்திரிந்த 20 பேர் கொண்ட பிரபல ரவுடி கும்பலை சென்னை மாநகர கூடுதல் கமிஷ்னர் அஸ்ரா கார்க் தலைமையிலான திருமங்கலம் காவல் நிலைய தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சென்னையில், கூலிப்படைத் தலைவனாக செயல்பட்டு வந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி ஒற்றை கண் ஜெயபால்(63) அரக்கோணம், ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த பிரபல ரவுடி சொக்கலிங்கம்(எ) சுரேஷ்(24), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி முத்துக்குமார்(எ)மதன்(30) ஆகியோர் சிக்கினர். அவர்களிடமிருந்து 4 கைத்துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், 10 கத்திகள் மற்றும் 5 சொகுசு கார்கள் மற்றும் 20 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மூவரும் கடந்த 2023ம் ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்து இம் மாதம்தான் நீதிமன்ற பினையில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய ரவுடிகள் 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பீகாரில் இருந்து துப்பாக்கிகளை வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 15ம் தேதி தனிப்படை போலீசார் 20 பேர் மீதும் வழக்குப்பதிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, தனிப்படை போலீசார் பீகார் மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு துப்பாக்கிகள் விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த இஸ்மாயில்(38) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து சென்னை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். ரவுடிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கியது குறித்து விசாரித்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட ரவுடி கும்பலுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தம்பி(எ) தம்பிராஜா(55), துப்பாக்கிகள் விற்பனை செய்து வந்துள்ளார்.

இவர் மீது 5 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி, ஆள் கடத்தல், வெடி பொருட்கள் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில உள்ளன. தனது எதிரிகளால் உயிருக்கு ஆபத்து என்பதால் ரவுடி தம்பிராஜா, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லாமல் சென்னை மற்றும் பீகாரில் பதுங்கி இருந்து ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்துள்ளார்.

அப்போது பீகாரைச் சேர்ந்த இஸ்மாயிலுடன் பழக்கம் ஏற்பட்டு பல்வேறு மாநிலங்களிலும் உள்ள ரவுடிகளுக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளனர். அதில், கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து சொகுசு கார்கள், தங்குவதற்கு நட்சத்திர ஓட்டலில் அறைகள் என சொகுசாக வாழ்ந்துள்ளனர். இதனையடுத்து துப்பாக்கிகளை யார் யாருக்கு விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து இஸ்மாயிலிடம் விசாரித்து வருகிறோம், என்றனர்.

The post சென்னையில் ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பிரபல ரவுடி பீகாரில் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bihar ,Thirumangalam ,
× RELATED திருமங்கலத்தில் பேருந்து...