×

சென்னையில் ரவுடி கும்பலுக்கு துப்பாக்கி சப்ளை; பீகாரில் பிரபல ரவுடி சுற்றிவளைப்பு: 84 தோட்டாக்கள், 10 கத்திகள், 5 சொகுசு கார்கள் பறிமுதல்

அண்ணாநகர்: சென்னையில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்கள் சப்ளை செய்த பிரபல ரவுடியை பீகாரில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் கடந்த 13ம்தேதி பிரபல ரவுடிகள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் சென்று சுற்றிவளைத்தனர். அப்போது ஓட்டலில் இருந்து வெளியே வந்த 17 ரவுடிகளை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதில் கடந்த 2025ம் ஆண்டில் சென்னையில் கூலிப்படை தலைவனாக செயல்பட்டுவந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் ஒற்றை கண் ஜெயபால்(63), அரக்கோணம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம்(எ) சுரேஷ்(24), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார்(எ) மதன்(30) என்பதும் இவர்கள் 3 பேரும் கடந்த 2023ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்தனர் என தெரிந்தது. இதையடுத்து இவர்களுடன் சதி திட்டம் தீட்டியதாக மற்ற அனைத்து ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சென்னையில் ரவுடிகளுக்கு துப்பாக்கிகளை சப்ளை செய்துவந்த பிரபல ரவுடி பீகார் மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக பீகார் மாநிலம் விரைந்து சென்று விசாரித்தனர். இதன்பின்னர் அங்கு பதுங்கியிருந்த பிரபல ரவுடி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பி(எ) தம்பிராஜா(55) கடந்த 15ம் தேதி கைது செய்தனர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபலமான ரவுடி கும்பலைச் சேர்ந்தவர். கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டுவந்துள்ளார்.

இவர் மீது 5 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்கு, ஆள் கடத்தல் மற்றும் வெடி பொருட்கள் வைத்திருந்தது உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் எதிர் கோஷ்டியினரால் தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து கொண்டதால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு வராமல் சென்னை மற்றும் பீகார் மாநிலத்தில் தலைமறைவாக இருந்துள்ளார். இவர்தான் பீகாரில் இருந்து சென்னையில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்துவந்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, பீகார் மாநிலத்தில் பதுங்கியிருந்து சென்னையில் உள்ள ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்ததாக மற்றொரு ரவுடி சென்னையை சேர்ந்த இஸ்மாயில்(38) என்பவரை கைது செய்தனர். இவர் பீகாரில் இருந்து துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களை வாங்கி ரவுடிகளுக்கு சப்ளை செய்துள்ளார். இதையடுத்து இவர் யார், யாருக்கு துப்பாக்கி சப்ளை செய்துள்ளார் என்றும் இவருக்கு பின்னால் யார் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

The post சென்னையில் ரவுடி கும்பலுக்கு துப்பாக்கி சப்ளை; பீகாரில் பிரபல ரவுடி சுற்றிவளைப்பு: 84 தோட்டாக்கள், 10 கத்திகள், 5 சொகுசு கார்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Chennai ,Annanagar ,Bihar ,Thirumangalam ,Rawudi Gang ,Rawudi Roundabout ,
× RELATED ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது!