×

பூந்தமல்லி அருகே பள்ளி வேனில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கிளினர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே ஒரு தனியார் பள்ளி வேனில் வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் கிளினரை போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் ஒரு பிரபல தனியார் பள்ளி இயங்கி வருக்கிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் பள்ளி வேனிலேயே சென்று வருவது வழக்கம். இந்நிலையில், இப்பள்ளியை சேர்ந்த வேனில் ஏற்றி செல்லப்படும் மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக நசரத்பேட்டையை சேர்ந்த கிளினர் ஞானசேகர் (32) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடமோ, பெற்றோரிடமோ கூறினால் கொன்றுவிடுவேன் என கிளினர் ஞானசேகர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி வேனில் தங்களிடம் கிளினர் ஞானசேகர் பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து பெற்றோரிடம் பள்ளி மாணவிகள் அழுதபடி கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவிகளின் பெற்றோர் சார்பில் நேற்று மாலை பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின்பேரில் போலீசார் பள்ளி வேன் கிளினர் ஞானசேகரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தனது வேனில் வந்த பள்ளி மாணவிகளிடம் கிளினர் ஞானசேகர் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருப்பதாகத் தெரியவந்தது.

இப்புகாரின்பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்று காலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் கிளினர் ஞானசேகரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பூந்தமல்லி அருகே பள்ளி வேனில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கிளினர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Pocso ,Sembarambakkam ,Pocsoville ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்