புதுடெல்லி: தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதி வரை பல்வேறு கட்சிகளுக்கு 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டது என பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பணம் பெறுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த புலனாய்வு பெண் பத்திரிகையாளர் பூனம் அகர்வால் கூறுகையில், ‘தேர்தல் பத்திரத்தை புலனாய்வு செய்வதற்காக, சொந்த செலவில் அதனை வாங்கி தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினேன்.
தேர்தல் பத்திரம் மீதான எனது ஆர்வத்தால் தேர்தல் பத்திரத்தை தடயவியல் பரிசோதனை செய்ய ஆய்வுக்கு அனுப்பினேன். எனது முதல் 1,000 ரூபாய் தேர்தல் பத்திரத்தை ‘ட்ரூத் லேப்’ தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்காக கொடுத்தபோது, புற ஊதா கதிர்களின் கீழ் தனித்துவ அடையாள எண் மறைந்திருப்பது தெரியவந்தது. இவற்றை தனித்துவ அடையாள எண் என்பதை நிரூபிக்க, மீண்டும் 1,000 ரூபாய் மதிப்புள்ள மேலும் ஒரு பத்திரத்தை வாங்கி தடயவியல் சோதனைக்கு அனுப்பினேன். அதிலும் தனித்துவ அடையாள எண் இருப்பதை உறுதி செய்தேன்.இரு பத்திரங்களும் வெவ்வேறு எண்களை பத்திரங்களில் மறைத்து வைத்திருந்தன. எனவே பத்திரங்கள் மறைக்கப்பட்ட தனிப்பட்ட எண்களைக் கொண்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டது.
பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இந்த தனிப்பட்ட எண்கள் பதிவு செய்யப்பட்டு, தணிக்கைப் பாதைக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது. இரண்டு பத்திரங்களும் வெவ்வேறு எண்களை பத்திரங்களில் மறைத்து வைத்திருந்தன. எனவே பத்திரங்கள் மறைக்கப்பட்ட தனிப்பட்ட எண்களைக் கொண்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.
The post தடயவியல் பரிசோதனையின் மூலமாக தேர்தல் பத்திர விபரங்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பூனம் அகர்வால் appeared first on Dinakaran.