×

புழல் சிறையில் பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்: 4 பேர் மீது வழக்கு

புழல், மார்ச் 17: புழல் சிறையில் பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கடத்திய கஞ்சாவை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புழல் விசாரணை சிறையில் உள்ள கைதிகளை மனு அளித்து பார்ப்பதற்கு அவர்களது உறவினர்கள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் கைதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை கொடுப்பது வழக்கம். இதேபோல், சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு சென்று திரும்பும் கைதிகளுக்கும், அவரது உறவினர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவது வழக்கம். இதனை, சிறை காவலர்கள் நன்கு பரிசோதனை செய்துவிட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட கைதிகளிடம் வழங்குகின்றனர். அதன்படி, கைதிகளுக்கு நேற்று கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை சிறை காவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 4 பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து பார்த்தனர். அதில், பிஸ்கட்கள் நடுவே துளையிட்டு கஞ்சாவை பொட்டலமாக சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 4 பிஸ்கட் பாக்கெட்களில் இருந்து 45 கிராம் கஞ்சாவை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி மீண்டும் சிறைக்கு திரும்பிய கைதி ஒருவர் பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் சிறைக்குள் கஞ்சாவை கடத்திய சாரதி, முபஷீர் அகமது, கோபிநாத், மோள கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post புழல் சிறையில் பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்: 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Puzhal ,Puzhal Trial ,Jail ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...