×

சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 500 கன அடி நீர் திறப்பு

புழல், மார்ச் 17: சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். ஏரியில் நேற்றைய நிலவரப்படி 2680 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதிலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 189 கனஅடி அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடியாகும்.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 326 மில்லியன் கன அடியாக உள்ளது. இதிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் மதகுகள் வழியாக நேற்று புழல் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 13ம் தேதி முதல் புழல் ஏரிக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

The post சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 500 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Cholavaram Lake ,Puzhal Lake ,Puzhal ,Chennai ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...