×

எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருவொற்றியூர், மார்ச் 17: எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட உர தொழிற்சாலையை மூடக் கோரி பொதுமக்கள், வியாபாரிகள் நேற்று மனித சங்கிலி, கடையடைப்பு போராட்டம் நடத்தினர். எண்ணூர் பெரிய குப்பத்தில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அமோனியா வாயு கசிந்து சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது.இதை தொடர்ந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எண்ணூரை சுற்றி உள்ள 33 மீனவ கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமும் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றர். அதன்படி, வாயு கசிவு ஏற்பட்ட உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் சின்ன குப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து, மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது உரத் தொழிற்சாலையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் பதாகைகளை பிடித்து இருந்தனர். போராட்டம் காரணமாக, துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ennoor ,Tiruvottiyur ,Ennoor Periya Kuppam ,Dinakaran ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...