×

மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசிய குஷ்பு உருவபடம் எரித்து ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரியில் மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசிய பாஜவைச் சேர்ந்த குஷ்புவின் உருவபடத்தை திமுக மகளிர் மற்றும் தொண்டர் அணியினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை குறித்து கொச்சைப்படுத்தி பேசியதை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் குஷ்புவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நேற்று மாலை நடந்தது.

பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன், மாவட்ட மகளிர் அணி தலைவர் உமா காத்தவராயன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயலலிதா சசிதரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜவை சேர்ந்த குஷ்புவின் உருவப்படத்திற்கு துடைப்பத்தால் அடித்து தீ வைத்தும் எரித்தனர்.

இதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட உருவ பொம்மையை கொண்டு வந்து எரிக்கும்போது காவல்துறையின் அதனை கொண்டு சென்று எரிக்க விடாமல் தடுத்ததால் மகளிர் ஆவேசம் அடைந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், குஷ்புவின் உருவப்படத்தை கிழித்து நடுவீதியில் அதனை தீயிலிட்டு கொளுத்தினர். அப்போது, காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அதனை அணைத்தனர். பின்னர் குஷ்புவை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகைக்கு எதிராக குஷ்புவின் நடவடிக்கையினை கண்டித்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை பெண்கள் கேட்டுக் கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் உமா காத்தவராயன், பத்மா, பிரபாவதி, நளாயினி அருள்முருகன், தொண்டரணி ஜெயசித்ரா, சிவராஜ், அமுதா பாஸ்கர், கோமளா அருள், சுந்தரி அன்பு, சுபாஷ் சினி ரவி, வெற்றிச்செல்வி, புஷ்பராணி, நிர்மலா, மோகனப்பிரியா உள்ளிட்ட மகளிர் மற்றும் தொண்டரணி அமைப்பினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி: பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் பேருந்து நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் இணைந்து குஷ்புவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசிய குஷ்பு உருவபடம் எரித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Khushbu ,Ponneri ,DMK ,BJP ,Khushpu ,Thiruvallur ,East ,Tamil Nadu government ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்