×

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது: பிரதமர் மோடி பேச்சு

கன்னியாகுமரி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக அகஸ்தீஸ்வரம் சென்றார். பிரதமர் வந்த வழியெங்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர்; தமிழக மண்ணில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிகிறது. நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கிஎறிந்துவிட்டார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது. கன்னியாகுமரி பாஜகவுக்கு எப்போதும் மாபெரும் ஆதரவு தந்திருக்கிறது. காங். ஆட்சியில் குமரி மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை; பாஜக அரசு வந்த பிறகு தான் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

வாஜ்பாய் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் கொண்டு வந்தார். பாஜக அரசு ஏராளமான விமான நிலையங்களை கட்டியது. பாஜக ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப் பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கன்னியாகுமரி திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை பாஜக அரசு செயல்படுத்தி உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை பாஜக அரசு புதுப்பித்துள்ளது. வ.உ.சி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் ரயில்வே, சாலை வசதிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.

விரைவில் இரட்டை ரயில்பாதை பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறோம். மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை உணர்ந்து பாராட்டுகிறேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பல்வேறு ஊழல்கள் அரங்கேற்றப்பட்டன. நாங்கள் உதான் திட்டத்தை கொண்டுவந்தோம்; அவர்கள் ஹெலிகாப்டரில் ஊழல் செய்தார்கள். கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம்; காமன்வெல்த் போட்டியில் காங். ஊழல் செய்தது. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற பாஜக அரசுதான் காரணம்.

தமிழர்களின் பெருமையை புறக்கணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை. நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம். குமரி மக்களின் அன்பும், பாசமும் மொத்த இந்தியாவுக்கும் பலம் தருகிறது. கன்னியாகுமரியில் ஏற்பட்டிருக்கும் ஆதரவு அலையைப் பார்த்து, டெல்லியில் இருப்பவர்களுக்கு தூக்கம் கெட்டுவிட்டது இவ்வாறு கூறினார்.

The post காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,wave ,Kanyakumari ,PM Modi ,Kashmir ,Modi ,Thiruvananthapuram ,Aghastieswaram ,
× RELATED தென்னிந்தியாவை பாஜக அரசு...