×

நியோமேக்ஸ் மோசடியை விசாரிக்க சிறப்பு குழு: ஏமாறும் மக்கள் ; ஐகோர்ட் கிளை வேதனை

மதுரை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிதி நிறுவனம் போலி வாக்குறுதிகளை அளித்து மக்களிடம் ரூ.5000 கோடி வரை முதலீடுகளைபெற்று மோசடி செய்து உள்ளது. இந்த வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற நியோமேக்ஸ் இயக்குநர் கமலக்கண்ணன் மற்றும் கபிலின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில், நியோமேக்ஸ் தொடர்புடைய 19 நிறுவனங்களின் வங்கி கணக்குகள், 2 சொத்துக்களும் முடக்கம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 5 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.40 கோடியும் முடக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ஏமாறும் மக்களின் நிலையை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றம், வக்கீல் கமிஷனர்களை நியமித்தது தவறு. இந்த செயல் வினோதமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் ஒருபோதும் தப்பி விடக்கூடாது.

நிதிநிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது. இந்த வழக்கில் தனியாக ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டி வரும்,’ என்றார். தொடர்ந்து நியோமேக்ஸ் நிறுவன வங்கி கணக்கு, இருப்பு மற்றும் முடக்கம் செய்யப்பட்டவை குறித்த விபரங்களை நியோமேக்ஸ் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 21க்கு தள்ளி வைத்தார்.

The post நியோமேக்ஸ் மோசடியை விசாரிக்க சிறப்பு குழு: ஏமாறும் மக்கள் ; ஐகோர்ட் கிளை வேதனை appeared first on Dinakaran.

Tags : Neomax ,iCourt ,Madurai ,Neomax Properties (B) Limited ,Kamalakannan ,Special Committee ,Investigate ,Aikord ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் மோசடி: மேலும் 4 பேர் கைது