×

பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் சஸ்பெண்ட் தமிழாசிரியர் மீது போக்சோ பாய்ந்தது

புதுச்சேரி, மார்ச் 15: பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழாசிரியர் மீது நெட்டப்பாக்கம் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். புதுச்சேரி அடுத்த கல்மண்டபம் அரசு உயர் நிலைப்பள்ளி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) கிருஷ்ணசாமி, அப்பகுதியில் உள்ள வேறொரு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் எழுந்தது. காரில் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி மாணவியை தன்னுடன் அழைத்துச் சென்ற ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், தங்கள் விபரங்கள் வெளியே தெரிந்துவிடும் என அஞ்சிய பெற்றோர், நேரடியாக கல்வித்துறையில் புகார் அளித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், தமிழாசிரியர் கிருஷ்ணசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 29ம்தேதி சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று தமிழாசிரியர் கிருஷ்ணசாமி மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், மேலும் சில ஆசிரியர்கள் மீதும் மாணவிகளிடம் இருந்து கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

The post பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் சஸ்பெண்ட் தமிழாசிரியர் மீது போக்சோ பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Nettapakkam ,Krishnasamy ,Kalmandapam Government High School ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு