×

தினசரி ரயிலாக இயக்க வாய்ப்புள்ள விவேக் எக்ஸ்பிரஸ் மதுரை, சென்னை வழியாக இயக்கப்படுமா? ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி – திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரிலிருந்து அசாம் மாநிலத்தின் திப்ரூகர் என்ற இடத்துக்கு 2011ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே அதிக தூரம் அதாவது 4273 கி.மீ இயக்கப்படும் ரயில் ஆகும். இந்த ரயில் முதலில் கொச்சுவேளியிருந்து எர்ணாகுளம் வழியாக திப்ரூகருக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு பின்னர் புதிய நிரந்தர ரயிலாக இயக்கலாம் என்று ரயில்வே பட்ஜெட்டின் போது திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கொச்சுவேளி ரயில் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படும் என்றும் வேறு புதிய ரயில்கள் கொச்சுவேளியில் இருந்து கேரளா பயணிகளுக்கு இயக்க முடியாமல் இந்த ரயில் பெட்டியால் பிரச்னை வரும் என்று அறிந்த திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கப்படுகிறது என்று அப்போது முதல் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படுகிறது என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு ரயில்வே வரியம் இந்த கன்னியாகுமரி – திப்ரூகர் வாராந்திர ரயிலை வாராந்திர ரயில் சேவையிலிருந்து தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தது. இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்துக்கு நான்கு நாட்கள் ரயிலாக இயங்கி வருகின்றது. குமரி மாவட்ட மக்கள் சென்னை செல்ல பயணசீட்டு கிடைக்காமல் இருக்க முழு ரயிலும் காலியான ஏன் இந்த ரயில் இவ்வாறு இயக்கப்படுகின்றது என்று அனைவரது மனதிலும் கேள்வி இயங்கையாகவே எழுகிறது. தற்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் செல்லும் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்ய ரயில்வேதுறை திட்டமிட்டு அதற்கான பணிகளை விரைவாக செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்த ரயில் தினசரி இயக்குவதற்க தேவையான காலி பெட்டிகள் நாகர்கோவில் வந்து விட்டது.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் இல்லை. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்பு பாதை இருவழிபாதையாக ஒரு மாதத்துக்குள் மாற்றம் பெற்றுவிடும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த கன்னியாகுமரி திப்ரூகர் இயக்கப்படும் வாரத்துக்கு மூன்று நாள் சேவையை திருநெல்வேலி, மதுரை, திருச்சி , விழுப்புரம் சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. இந்த ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்கும் போது குமரி மாவட்ட பயணிகள் தங்கள் தலைநகர் சென்னைக்கு செல்ல ரயில்சேவை கிடைக்கும். இவ்வாறு சென்னை வழியாக இயக்கும் பட்சத்தில் சுமார் 250 கி.மீக்கு குறைவான கட்டணம் செலுத்தி குறைந்த பயணநேரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு பயணிக்கலாம். இது மட்டும் இல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல பகல் நேர ரயில் சேவையும் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களை சார்ந்த பயணிகளுக்கு வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவையும் கிடைக்கும்.

தற்போது சென்னையை தவிர தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல எந்த ஒரு நேரடி ரயில் சேவையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தென்மாவட்டங்களிலிருந்து தமிழகம் வழியாக பயணம் செய்ய 1000 கி.மீக்கு மேல் பயணம் செய்யும் ஒரு தினசரி ரயில் கூட இதுவரை மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களிலிருந்து புறப்படும் படியாகவோ அல்லது இந்த கோட்ட எல்லைக்குள் இயங்கும் படியாகவோ ரயில்வேதுறையால் அறிவித்து இயக்கப்படவில்லை. திருநெல்வேலி, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலிருந்து கூட் 1000 கி.மீக்கு மேல் பயணம் ஒரு தினசரி ரயில் இதுவரை இல்லை. எனவே கன்னியாகுமரி – திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை, சென்னை வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு ரயில் பயணிகள் தெரிவித்தனர்.

The post தினசரி ரயிலாக இயக்க வாய்ப்புள்ள விவேக் எக்ஸ்பிரஸ் மதுரை, சென்னை வழியாக இயக்கப்படுமா? ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Vivek Express ,Madurai, Chennai ,Nagercoil ,Kanyakumari ,Dibrugarh ,Express ,Madurai ,Chennai ,Kanyakumar ,Assam ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...