×

அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு சென்னை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை தர உத்தரவிடக்கோரி ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் பொதுநல வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளில் பிறந்த குழந்தைகளுக்கு விரும்பிய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ரவிக்குமார் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த மனுவில், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த 94ஆயிரம் பேரில் 59,500 பேர் முகாம்களில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முகாம்களில் வளரும் குழந்தைகள், அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற இயலாததால் அகதிகள் முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கோரி அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமைபெற இல்லை என உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்து, இந்த உத்தரவை ரத்து செய்து தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை வாசித்த நீதிபதிகள், இந்த மனு பொதுப்படையாக உள்ளதாகவும், முகாம்களில் இருப்பவர்கள் குறித்து விவரங்கள் இல்லாமல் மனுதாக்கல் செய்யப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் குடியுரிமை பெறாததால் பாதிக்கப்பட்டதாக விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai iCourt ,Chennai ,Chennai High Court ,Chennai Aycourt ,EU ,Sri Lanka ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...