×

பிரபல ஓட்டலில் பதுங்கியிருந்த ரவுடிகள் 17 பேர் சுற்றிவளைப்பு: திருமங்கலத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: திருமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடிகள் 17 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கி, 14 குண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சென்னை சைதாப்பேட்டையில் இருந்து திருமங்கலம் நோக்கி சொகுசு கார்களில் 17 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிவருவதாக சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ரவுடிகள் தடுப்புபிரிவு சிறப்பு போலீசார் உடனடியாக சைதாப்பேட்டை மற்றும் திருமங்கலம் பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்தனர்.

இந்த நிலையில், திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் ரவுடிகள் சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று அங்கிருந்த 17 ரவுடிகளை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதன்பின்னர் அவர்கள் அனைவரையும் திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கூலிப்படை தலைவனாக செயல்பட்டுவந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஒற்றைகண் ஜெயபால் என்பதும் இவருடன் 16பேர் வந்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் 4 சொகுசு காரில் வந்துள்ளனர் என்றும் தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘’சைதாப்பேட்டையில் இருந்து 4 சொகுசு காரில் பயங்கர ஆயுதங்களுடன் 17 ரவுடிகள் திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அவர்கள் அனைவரையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கி, 14 குண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் வந்தார்கள் என்றும் யாரையாவது கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார்களா? இவர்களை பாதுகாத்து கொள்ள ஆயுதங்களை கொண்டு வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

The post பிரபல ஓட்டலில் பதுங்கியிருந்த ரவுடிகள் 17 பேர் சுற்றிவளைப்பு: திருமங்கலத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Annanagar ,Thirumangalam ,Saitappettai, Chennai ,
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு