×

மேலிட தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: பாஜ கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டு வாசன் பிடிவாதம்

சென்னை: பாஜ மேலிட தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பாஜ கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டு ஜி.கே.வாசன் பிடிவாதம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் சுமுக உடன்பாடு எட்டப்படும் என்று அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், பாஜ கூட்டணியில் இணைந்துள்ள தமாகா தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இன்னும் தொகுதி எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், பாஜ- தமாகா இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில், பாஜ சார்பில் சென்னை வந்துள்ள ஒன்றிய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி மற்றும் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் மூத்த நிர்வாகிகள் விடியல் சேகர், சக்திவடிவேல், என்.டி.எஸ்.சார்லஸ், சைதை மனோகரன், முனவர் பாஷா ஆகியோர் வந்திருந்தனர்.

இருதரப்பினரும் தமாகாவுக்கு ஒதுக்கப்படக்கூடிய தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாஜ கூட்டணியில் தமாகவுக்கு மயிலாடுதுறை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய 3 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என்று ஜி.ேக.வாசன் மீண்டும் அவர்களிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமாகாவுக்கான தொகுதிகளை தெரிவிக்கிறோம் என்று பாஜ தப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், பாஜ மேலிட தலைவர்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் உடன்பாடு எட்டப்படும். முக்கியமாக இந்த சந்திப்பில் தொகுதிகள், எண்ணிக்கைகள் என்பதை விட இந்த தேர்தலில் எந்த வியூகத்தின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி அடய வேண்டும் என்று ஆலோசனை நடத்தினோம். பாஜ கட்சி தலைமையிலான கூட்டணியில் இணையும் தமிழக கட்சிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. முழு வடிவம் வெற்றி வடிவமாக அமைய கூடும். தொகுதி எண்ணிக்கை முக்கியம் தான். தமாகா ஒரு நம்பிக்கையான கட்சி நல்லது நடக்கும் என்றே நினைக்கிறேன். நான் அவர்களிடம் என்ன கேட்டேன் என்று எனது பக்கத்தில் உள்ளவர்களுக்கே தெரியாது. அப்போது உங்களுக்கு எப்படி தெரியும்? என்றார்.

 

The post மேலிட தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: பாஜ கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டு வாசன் பிடிவாதம் appeared first on Dinakaran.

Tags : Vasan ,BJP alliance ,CHENNAI ,GK Vasan ,BJP ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...