×

திம்பம் மலைப்பாதையில் விபத்து கார் மீது லாரி கவிழ்ந்து 3 பேர் பலி

*கோவிலுக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கார் மீது கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவருக்கு சொந்தமான காரில் நண்பர்கள், உறவினர்களான நம்பியூரைச் சேர்ந்த குமார் (60), இண்டியம்பாளையத்தைச் சேர்ந்த சென்னையன் (55) மற்றும் சௌந்தரராஜ் (60), செல்வம் (63), மனோகரன் (59) ஆகியோர் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு நேற்று காலை புறப்பட்டனர். அவர்கள் திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடகா நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

27வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வந்துகொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டுனர்கள் போலீசார் உதவியுடன் காருக்குள் சிக்கிய 6 பேரில் சௌந்தரராஜ், செல்வம், மனோகரன் ஆகிய 3 பேரை காயங்களுடன் மீட்டனர். செல்வராஜ், குமார், சென்னையன் ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியில் செல்வராஜ், குமார், சென்னையன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த சௌந்தரராஜ், செல்வம், மனோகரன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலியான சென்னையன் செங்கல் சூளையில் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவருக்கு ராதாமணி என்ற மனைவியும், மவுலீஸ்வரன் என்ற மகனும், பூவிதா என்ற மகளும் உள்ளனர். மவுலீஸ்வரன் தனியார் கலை கல்லூரியில் எம்காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

மகள் பூவிதா 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். சென்னையனின் வருமானத்தை நம்பி இருந்த இந்த குடும்பம் அவர் இறந்துவிட்டதால் தற்போது நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குமார் என்பவர் தையல் தொழிலாளி. இவரது மகன் படிப்பு முடித்துவிட்டு தற்போதுதான் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக் பிரிவில் வேலைக்கு சேர்ந்துள்ளார். செல்வராஜுக்கு கலாமணி என்ற மனைவியும், ஜெயந்த் என்ற மகனும் உள்ளனர்.

கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி வந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post திம்பம் மலைப்பாதையில் விபத்து கார் மீது லாரி கவிழ்ந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thimpam road ,Sathyamangalam ,Selvaraj ,Kanchanayakanur ,Erode district ,Thimpam ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...