×

ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் மணலியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மணலி மண்டலத்திற்கு உட்பட்ட இடையன்சாவடி, சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது, என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.238.52 கோடி மதிப்பீட்டில், மணலி மண்டலம், 15வது வார்டுக்கு உட்பட்ட இடையன்சாவடி, 16வது வார்டுக்கு உட்பட்ட சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 8ம் தேதி தொடங்கி வைத்தார்.

மேற்கண்ட பகுதிகளில் 72.77 கி.மீ., நீளத்திற்கு 250 மி.மீ., முதல் 500 மி.மீ., விட்டமுள்ள கழிவுநீர் குழாய்கள் மற்றும் 22.65 கி.மீ.. நீளத்திற்கு 150 மி.மீ., முதல் 700 மி.மீ., விட்டமுள்ள கழிவுநீர் விசை குழாய்கள் பதிக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2,921 எண்ணிக்கையிலான இயந்திர நுழைவாயில்கள், 3 துணை உந்து நிலையங்கள், 8 சாலையோர உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, நாளொன்றுக்கு 5.61 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், இடையன்சாவடி, சடையன்குப்பம் மற்றும் காடப்பாக்கம் பகுதிகளில் உள்ள 262 தெருக்களில் 4000 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, 46,730 பொதுமக்கள் பயன்பெறுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.238.52 கோடி மதிப்பீட்டில் மணலியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Manali ,Drinking Water Board ,CHENNAI ,Idiyanchavadi ,Sadayankuppam ,Kadapakkam ,Chennai Drinking Water Board ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...