×

தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என ஆணவ பேச்சு தமிழகம் முழுவதும் குஷ்புவை கண்டித்து பெண்கள், திமுகவினர் போராட்டம்: உருவ பொம்மை எரித்தும், துடைப்பம், செருப்பால் அடித்தும் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என ஆணவ பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து பெண்கள், திமுகவினர் உருவ பொம்மை எரித்தும், துடைப்பம், செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜ பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து உள்ளன. குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது.

குஷ்புவின் உருவபொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும் திமுகவினர், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரில் திமுக மகளிரணி வடக்கு மாவட்ட துணை செயலாளர் சுபேதா தலைமையில் கட்சியினர் குஷ்பு உருவப்படத்தை நேற்று தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகாசி மாநகரம் திருத்தங்கல் அண்ணா சிலை முன்பு குஷ்புவின் உருவப்படத்தை திமுக மகளிர் அணியினர் எரித்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன் தலைமையில் திரண்ட திமுகவினர், குஷ்புவின் உருவ பொம்மையை அண்ணா சிலை முன்பு எரித்து தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். குமரி கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கன்னியாகுமரி ரயில் நிலையம் முன்பு நேற்று குஷ்புவை கண்டித்து போராட்டம் நடந்தது.

நெல்லை வண்ணார்பேட்டையில் மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் தலைமை திமுகவினர் குஷ்பு உருவபொம்மையை துடப்பத்தால் அடித்து எரிக்கும் போராட்டத்தின் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணியினர், அவரது உருவ படத்தை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் திமுக மாவட்ட மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்புவை கண்டித்தும், கனிமொழி எம்பி குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை பேசியதை கண்டித்தும் அண்ணாமலை, குஷ்பு படங்களை தீயிட்டு கொளுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில திமுக மகளிரணி வலைதள பொறுப்பாளர் ரியா தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து கோஷங்களை எழுப்பினர். இதேபோல் பரமத்தி வேலூர், நாமக்கலில் நடிகை குஷ்புவை கண்டித்து நேற்று திமுகவினர் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குஷ்புவை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.

The post தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என ஆணவ பேச்சு தமிழகம் முழுவதும் குஷ்புவை கண்டித்து பெண்கள், திமுகவினர் போராட்டம்: உருவ பொம்மை எரித்தும், துடைப்பம், செருப்பால் அடித்தும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Women ,DMK ,Khushbu ,Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...