×

இரணியல் அருகே கடன் தொல்லையால் தாய்-மகன் விஷமருந்தி தற்கொலை

திங்கள்சந்தை : இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சடவிளையில் வசித்து வந்தவர் பிஜூ பிரசாத் (35). இவரது தாயார் விலாசினி (65). இவர்கள் ஊதுபத்தி சாம்பிராணி, வாசனை திரவியங்கள் தயார் செய்து மொத்த விற்பனை செய்து வந்தனர். பிஜூ பிரசாத்திற்கு புதிய வாகனம் வாங்கிய வகையில் கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினர் ஒருவருக்கு போன் மூலம் பேசிய பிஜூ பிரசாத் நானும் அம்மாவும் விஷம் குடித்து சாகப் போவதாக கூறி உள்ளார். இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள பிஜூவின் நண்பர்களுக்கு தகவல் கூறினர். அவர்கள் வீட்டில் வந்து பார்த்த போது இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.

உடனடியாக அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பிஜூ பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து விலாசினியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விலாசினியும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஜூ பிரசாத் தந்தை வல்சகுமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பிஜூவின் அண்ணனும் சமீபத்தில் இறந்துள்ளார். பிஜூ பிரசாத்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் தாய் மகன் இருவரும் சொந்த இடமான மணவாளக்குறிச்சியில் இருந்து இரணியல் வந்து கடந்த 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் கடன் தொல்லையில் மிகுந்த வருத்தத்தில் இருந்த தாய் மகன் இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளனர். கடன் தொல்லையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post இரணியல் அருகே கடன் தொல்லையால் தாய்-மகன் விஷமருந்தி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Iranial ,Biju Prasad ,Sadavilai ,Iranial Government High School ,Vilasini ,
× RELATED இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி