×

விபத்துகளில் தாய், தந்தையை இழந்த 31 மாணவர்களின் உயர் கல்விக்கு ரூ.23.25 நிதி: குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்

 

விருதுநகர், மார்ச் 12: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் விபத்துக்களில் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் எதிர்கால கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசால் வழங்கப்படும் தலா ரூ.75 ஆயிரம் வீதம் 31 மாணவர்களுக்கு ரூ.23.25 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

இந்த தொகை வைப்பு நிதியாக வைக்கப்பட்டு மாணவர்கள் 21 வயதை அடையும் போது வட்டியுடன் வழங்கப்படும்.தாட்கோ மூலம் ஒரு நபருக்கு ரூ.4லட்சம் மானியத்தில் ஆட்டோ, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு தலா ரூ.5,600 மதிப்பிலான காதொலி கருவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராஜேந்திரன், தனித்துறை ஆட்சியர் அனிதா உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post விபத்துகளில் தாய், தந்தையை இழந்த 31 மாணவர்களின் உயர் கல்விக்கு ரூ.23.25 நிதி: குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Virudhunagar ,People's Grievance Day ,Virudhunagar Collector ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்