×

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.111 கோடி போதை பொருள் பறிமுதல்

புதுக்கோட்டை: இலங்கைக்கு கடத்துவதற்காக புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹஷிஸ், ரூ.1.05 கோடி மதிப்பிலான 876 கிலோ கஞ்சாவை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் மீமிசலில் இறால் பண்ணை கொட்டகையில் ஹஷிஸ், கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு இலங்கைக்கு கடத்த இருப்பதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த துறையின் முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திருச்சி சுங்கத்தடுப்பு ஆணையரகத்தின் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள், மீமிசல் கிராமத்தில் அதிரடியாக நேற்று முன்தினம் மாலை சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சென்று பூட்டப்பட்டிருந்த இறால் பண்ணை கொட்டகையின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது ஹஷிஷ், கஞ்சா போன்ற கடத்தல் பொருட்கள் அடங்கிய 48 பைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஆய்வு செய்தனர். அதில், ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹஷிஷ் மற்றும் ரூ.1.05 கோடி மதிப்பிலான 876 கிலோ உலர்கஞ்சா போதைப்பொருள் என தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் இறால் பண்ணையின் உரிமையாளர் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டிணத்தை சேர்ந்த அமீர்சுல்தான் என தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.111 கோடி போதை பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Pudukottai ,Trichy Central Intelligence Division Customs ,Pudukottai District ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...