×

சிறார் ஆபாச வீடியோ பார்ப்பது குற்றம் இல்லை என தீர்ப்பு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடெல்லி: சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் சிறார் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட இளைஞரை ஆஜராகச் சொல்லி அவரிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 90ஸ் கிட்ஸ்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ அதேபோன்று 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளனர். இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில் இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து இதுசம்பந்தமாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,” ஆபாச படம் விவகாரத்தில் ஒரு தனி நீதிபதி எப்படி இதுபோன்று கூறி உத்தரவை பிறப்பிக்க முடியும். இது மிகவும் கொடுமையான ஒன்றாக இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்த என தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post சிறார் ஆபாச வீடியோ பார்ப்பது குற்றம் இல்லை என தீர்ப்பு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Justice Anand Venkatesh ,New Delhi ,Ambattur ,Chennai ,Thiruvallur ,Pocso ,Justice ,Anand Venkatesh ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு