×

புழல் அருகே பேப்பர் கடை ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

புழல்: புழல் சைக்கிள் ஷாப் ஜிஎன்டி சாலை, நாகாத்தம்மன் கோயில் அருகில் பழைய பேப்பர் கடை உள்ளது. இங்கு, புழல் பகுதியை சேர்ந்த அய்யனார்(50) வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இந்த பழைய பேப்பர் கடைக்கு, நேற்று முன்தினம் 2 பேர் வந்து அய்யனாரிடம் ரூ.1500 மாமுல் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது, நான் ஏன் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அய்யனார், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், வாக்குவாதம் முற்றவே, 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, அய்யனாரின் சட்டை பாக்கெட்டில் இருந்து 1500 பணத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து, பழல் காவல் நிலையத்தில், அய்யனார் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று புழல் ஜிஎன்டி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், செங்குன்றம் அடுத்த சரத் கண்டிகை கிராமத்தை சேர்ந்த வண்ணபட்டு(37), செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேஷ்குமார்(37) எனவும், 2 பேரும் பழைய பேப்பர் கடையில் வேலை செய்த நபரிடம் 1500 ரூபாய் பறித்து சென்றதும், காவாங்கரை மீன் மார்க்கெட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றதும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 1 கத்தி, ரூ.1500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post புழல் அருகே பேப்பர் கடை ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Puzhal Cycle Shop ,Nagathamman Temple, GND Road ,Ayyanar ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...