×

50 ஆண்டுகால வரலாற்று துயரம் முடிவுக்கு வந்தது தாயகம் திரும்பிய மக்கள் பெற்ற வீட்டுக்கடன் தள்ளுபடி

*பயண ஆவணங்கள், மனை பத்திரம் வழங்கல்

பந்தலூர் : தாயகம் திரும்பிய மக்கள் பெற்ற வீட்டுக்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்து முதற்கட்டமாக பயண ஆவணங்கள், மனை பத்திரம் வழங்கியது. இதன் மூலம் 50 ஆண்டுகால வரலாற்று துயரம் முடிவுக்கு வந்துள்ளது என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் ஐம்பது ஆண்டுகால வரலாற்று துயரம் முடிவுக்கு வந்தது. 1964 சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தப்படி இலங்கை மலையகத்திலிருந்து இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர் அதன்படி சுமார் 5 லட்சம் பேர் தாயகத்துக்கு அழைத்து வரபபட்டனர். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் 1970ல் தொடங்கி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மாநிலத்திலும் அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசத்திலும் குடியமர்த்தப்பட்டனர்.

இதில் கேரளா மாநிலத்தில் 1500 குடும்பங்களுக்கும், கர்நாடகா மாநிலத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கும் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் தொழில் வழங்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில் 2,500 குடும்பங்களுக்கு நூற்பாலைகளில் பணி வழங்கபபட்டது.தமிழகத்திற்கு வந்தவர்களில் 76,000 குடும்பங்களுக்கு வணிகக் கடன் வழங்கப்பட்டது. ரெப்கோ வங்கி கடன் திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தபட்டனர். விவசாயம், சுய வேலைவாய்ப்பு மூலம் 850 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கப்பட்டது. தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு அவர்களது பயண ஆவணங்களான குடும்ப அட்டை, கடவுச்சீட்டு, வீட்டுமனை பத்திரம் ஆகியவற்றை அடமானமாக பெற்றுக்கொண்டு வீட்டுக்கடன் வழங்கப்பட்டது.

1984 மார்ச் 31 தேதிக்கு முன் வழங்கப்பட்ட கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்து அவர்களிடம் அடமானமாகப் பெற்ற ஆவணங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க ஆணை வழங்கியது. அதன் பிறகு வீட்டுக்கடன்களுக்காக பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும்,
கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் உரிய பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால் பலரது ஆவணங்கள் எலிகளுக்கும், கரப்பான் பூச்சிகளுக்கும், கரையாண்களுக்கும் இறையாகிப்போனது.

இந்த கால கட்டத்தில் இந்த வீட்டுக்கடன் பெற்று கொடுப்பதாக கூறி புரோக்கர் கும்பல் ஒன்று, தாயகம் திரும்பிய மக்களை ஏமாற்றி அவர்களின் பயண ஆவணங்களைப் பெற்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் போலி கையெழுத்திட்டு சமர்ப்பித்து வீட்டுக்கடன்களை பெற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி பிழைப்பு நடத்தினர்.

அவ்வாறு பெறப்பட்ட சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பையாக குவிந்து கிடந்த நிலையில், தாயகம் திரும்பிய மக்களின் சார்பில் மத்திய அரசு தாயகம் திரும்பிய மக்களுக்கு வழங்கிய வீட்டுக்கடன்களை தள்ளுபடி செய்து அவர்களது பயண ஆவணங்களைப் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டி ரெப்கோ வங்கி டெலிக்கேட்ஸ் யூனியன் சார்பில் மறுவாழ்வுத்துறைக்கு தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் புதுக்கோட்டைக்கு வந்த தமிழக மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் முன்னாள் ரெப்கோ வங்கி இயக்குனரும், தென்னிந்திய தாயகம் திரும்பியோர் மேம்பாட்டு சங்கத்தின் தலைவருமாகிய மகாலிங்கம் மற்றும் புதுக்கோட்டை ரெப்கோ வங்கி பேரவை உறுப்பினர் சண்முகம் ஆகியோர் மேற்படி வீட்டுக்கடன் களை தள்ளுபடி செய்து பயண ஆவணங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

அவர்கள் உத்தரவின் பேரில் சண்முகம் தலைமையில் 10 பேர் கொண்ட தன்னார்வளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கடந்த 6 மாதங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் முதற் கட்டமாக ஒழுங்குபடுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மலையக மக்கள் முற்போக்கு மையம் ஏற்பாடு செய்து தென்னிந்திய தாயகம் திரும்பியோர் மேம்பாட்டு சங்கம் ஒத்துழைப்போடு நடைபெற்ற ‘மலையகம் 200’ மாநாட்டில் தாயகம் திரும்பிய மக்களின் நலனை மேம்படுத்த தாயகம் திரும்பியோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்டது.

மாநாட்டை தொடர்ந்து மலையக மக்கள் முற்போக்கு மைய சர்வதேச ஒருங்கிணைப்பாளர் காதர் தென்னிந்திய தாயகம் திரும்பியோர் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் மகாலிஙகம் ஆகியோர் தமிழக அரசின் சிறுபான்மை நலன் மற்றும் அயலக மறுவாழ்வத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக மறுவாழ்வு துறை ஆணையர் கிருஷணமூர்த்தி ஆகியோரை சந்தித்து 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாயகம் திரும்பிய மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக்கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். அமைச்சர் நடவடிக்கையின் மூலம் இக்கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் உத்தரவின் பேரில் தாயகம் திரும்பிய மக்கள் வீட்டு கடனுக்காக பெற்ற ரூபாய் 31 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அண்மையில் செலுத்தியது.

அதன் பயனாக மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தாயகம் திரும்பிய மக்கள் பெற்ற வீட்டுக் கடனை தள்ளுபடி செய்து கடந்த பிப்ரவரி 26ம் தேதி அன்று உத்தரவு பிறப்பித்தார். அதன்மூலம் அனைத்து தாயகம் திரும்பிய மக்களும் அந்தந்த மாவட்டங்களில் உரிய அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது பயண ஆவணங்களையும் மனைப்பத்திரத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 8ம் தேதி அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தாயகம் திரும்பிய பயனாளிகள் மூவருக்கு அமலகத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைப்பத்திரத்தை வழங்கினார்.
இந்த ஆவணங்களை பெற்றதன் மூலம் இழந்த சொத்துக்களை மீட்கவும், வங்கிக் கடன்களை பெறவும், ரெப்கோ வங்கியில் உறுப்பினராக பதிவு செய்யவும் பயன்படும் இதன் மூலம் தாயகம் திரும்பிய மக்கள் வாழ்வில் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும் இதன் பயனாக தாயகம் திரும்பிய மக்களின் நீண்ட கால துயரம் முடிவுக்கு வந்தது.

மேலும் தமிழக அரசு நலவாரியம் அமைக்கும் பணிக்கு ஆதாரமாக தாயகம் திரும்பிய மக்கள் கணக்கெடுப்புஅவசியம் எனக்கருதி மலையக மக்கள் முற்போக்கு மையம், சென்னை லயோலா கல்லூரி, டாடா நிறுவனம், புதுக்கோட்டை ரெனேசான்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்பணியை முன்னெடுக்கின்றது.

குறிப்பாக இந்தியாவில் ஆய்வியல் துறையின் தலைசிறந்த நிபுணரான பெர்னாண்டோ டி சாமி தலைமையில் சிறந்த கள ஆய்வாளரான சந்திரபிரகாஷ் முன்னெடுப்பில் தென்னிந்திய தாயகம் திரும்பிய மக்கள் மேம்பாட்டு சங்கம் ஒத்துழைப்போடு இந்த பணியானது முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

The post 50 ஆண்டுகால வரலாற்று துயரம் முடிவுக்கு வந்தது தாயகம் திரும்பிய மக்கள் பெற்ற வீட்டுக்கடன் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...