×

இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு

கோவை: இளைஞர்களை ஈர்க்கும் விதமாக ஈஷா மஹா சிவராத்திரி விழா இருப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூரினார். கோவை ஈஷா யோகா மையத்தில் 30-வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தலைமை தாங்கினார். இவ்விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: சத்குரு ஜகி வாசுதேவ் முன்னிலையில் நடத்தப்படும் ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நம் பாரத கலாசாரத்தில் மஹா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஈஷாவில் நடத்தப்படும் மஹாசிவராத்திரி விழாவானது தனித்துவமானது, ஈடு இணையற்றது.

உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், தேசம், கலாசாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. இது, மிகவும் பாராட்டுக்குரியது. சத்குரு ஜகி வாசுதேவ், யோகாவை உலகம் முழுவதும், பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்று வருகிறார். மனித குல நல்வாழ்விற்காக அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். விழாவில், துணை ஜனாதிபதியின் துணைவியார் டாக்டர் சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

The post இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Isha Maha Shivratri Festival ,Vice President ,Jagadeep Dhankar ,Coimbatore ,Maha Shivratri ,Isha Yoga Center ,Dinakaran ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!