×

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.143.69 கோடி செலவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.143.69 கோடி செலவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 136 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப்பண்ணைகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 6 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர், மாணவியர் விடுதிக் கட்டடம், கல்வித் தொகுதியின் கூடுதல் கட்டடம் மற்றும் அயிரை மீன் ஆராய்ச்சி நிலையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு பகுதியில் 50 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளம் மற்றும் கீழமுந்தல் மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளம், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மீனவ கிராமத்தில் 45 கோடி ரூபாய் செலவில் முகத்துவாரத்தை நிரந்தரமாக நிலைப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளம், அமலிநகர் மீனவ கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளம் மற்றும் கடம்பாவில் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய அரசு மீன் விதைப்பண்ணை, நாகப்பட்டினம் மாவட்டம்,

நம்பியார் நகர் சிறு மீன்பிடி துறைமுகத்தில் 10 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் கரையோர பாதுகாப்பு வசதிகள், செங்கல்பட்டு மாவட்டம், கடலூர் ஆலிகுப்பம் மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், கரூர் மாவட்டம், திருக்காம்புலியூரில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட மீன் விதைப்பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம், வடக்கம்மாபட்டினம் மீனவ கிராமத்தில் 1 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம்; என மொத்தம் 136 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப்பண்ணைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 36 தங்கும் அறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணியாளர் அறை உள்ளிட்ட வசதிகள் கொண்ட இரண்டு தளங்களுடன் 5 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர், மாணவியர் விடுதி மற்றும் கல்வித் தொகுதியின் கூடுதல் கட்டடம்; தேனி மாவட்டம், குள்ளப்புரம், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் 1 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில், ஆராய்ச்சி அலுவலகம், ஆய்வகம், பயிற்சிக் கூடம், மீன் நாற்றங்கால் அலகு, வெளி வளாக மீன் வளர்ப்பு தொட்டிகள், அயிரை மீன் வளர்ப்பு குளங்கள்,

அயிரை மீன் வளர்ப்பு தொட்டிகள் மற்றும் நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அயிரை மீன் ஆராய்ச்சி நிலையக் கட்டடம்; என மொத்தம் 6 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதன்மைச் செயலாளர் / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் என். பெலிக்ஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.143.69 கோடி செலவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Department of Fisheries and Fishermen's Welfare ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...