×

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்கொடி நாட்ட உறுதியாக இருப்போம்: மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக் கொடி நாட்ட உறுதியாக இருப்போம் என்று மதிமுக அறிவித்துள்ளது. மதிமுக நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், இந்திய நாட்டை சூழ்ந்திருக்கின்ற பாசிச இருளைப் போக்கி, ஜனநாயக வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு இமயம் முதல் குமரி வரை ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கிறது.

அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் பாஜ அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றியே ஆக வேண்டும். இந்த நோக்கத்தோடு அமைத்துள்ள ‘இந்தியா கூட்டணி’ 18வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ‘இந்தியா கூட்டணி’ தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்கொடி நாட்ட உறுதியாக இருப்போம்: மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, Puducherry ,DMK ,CHENNAI ,Madhyamik ,Tamil Nadu ,Puducherry ,MDMK executive committee ,Egmore ,Auditor ,A. Arjunaraj ,DMK alliance ,Puducherry, Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாக்களிப்பின் ரகசியமெல்லாம் போயே...